இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 2 போட்டிகள் இன்று (02) ஆரம்பமாகின.
இதில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய கண்டி மற்றும் தம்புள்ள அணிகளுக்கிடையிலான போட்டி சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதுடன், எந்தவொரு பந்தும் வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், கொழும்பு மற்றும் ஜப்னா அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கசுன் அபேரட்ன, ரொன் சந்திரகுப்தவுடன் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்காக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவித்தார். இதில் கசுன் அபேரட்ன 36 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
- இரண்டாம் இன்னிங்ஸில் திறமையான துடுப்பாட்டத்துடன் இலங்கை A அணி
- அபார இரட்டைச் சதத்துடன் இலங்கை A தரப்பினை பலப்படுத்திய நிஷான் மதுஷ்க
மறுமுனையில் ஜப்னா அணிக்காக துடுப்பாட்டத்தில் மீண்டும் நம்பிக்கை கொடுத்த ரொன் சந்திரகுப்த, அரைச் சதம் கடந்து 68 ஓட்டங்களுடன் வெளியேறினார். முன்னதாக இவர், கடந்த வாரம் நடைபெற்ற தம்புள்ள அணிக்கெதிரான போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் அரைச் சதமடித்து வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏவ்வாறாயினும், போதிய வெளிச்சமிண்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ஜப்னா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்தது.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக, 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (03) தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



























